எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

அலைந்து திரிவது

கால்நடை பண்ணைக்கு அருகில் வசித்து வந்த மைக்கேல் என்ற நகைச்சுவை நடிகர், மேய்ச்சலின் போது, மாடுகள் தன்னைப் போலவே எப்படி அலைந்து திரிகிறது என்பதை கவனித்தார். மாடு பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி நகர்ந்துக் கொண்டே இருக்கும். பண்ணையின் ஓரத்தில் ஒரு நிழல் மரத்தின் கீழ் பசுமையான புற்களை கண்டுபிடிக்கும். உடைந்துப்போன வேலிக்கு அப்பால் சுவையான பசுமையான ஒரு கொத்து இருந்தது. பின்னர் மாடு வேலிக்கு அப்பால் சென்று பிறகு சாலையிலிருந்தே வெளியேறக்கூடும். பின்னர் அது மெதுவாக தன் வழியிலிருந்து காணாமல் போய்விடும்.

இந்த சுற்றித் திரிகிற பிரச்சனை மாடுகளுக்கு மட்டும் இல்லை, ஆடுகளும் சுற்றித் திரிகின்றன, ஆனால் மனிதர்களும் வழியை விட்டு விலகுகிப் போகிற போக்குள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இதனால் தான் வேதாகமத்தில் தேவன் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். பொறுப்பற்ற சமரசங்கள் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எளிதாக எடுத்து நாம் அலைந்து திரிந்தும், வழியைவிட்டு விலகியும் விடுகிறோம். ஆனால், சத்தியத்தை விட்டு எவ்வளவோ விலகி சென்று விட்டோம் என்பதை நாம் கவனிக்கிறதில்லை.

பரிசேயர்களுக்கு, இயேசு காணாமல் போன ஆட்டின் கதையை கூறினார். தன்னிடமிருந்த தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்ற மேய்ப்பனுக்கு அந்த ஒரு ஆடு மிகவும் மதிப்புள்ளதாய் இருந்தது. காணாமல் போன அதை அவன் கண்டுப்பிடித்த போது அவன் சந்தோஷப்பட்டான் (லூக். 15:6).

மனந்திரும்பி அவரிடம் வருபவர்களினிமித்தம் தேவனும் அப்படியே சந்தோஷப்படுவார். காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் (வ 6) என்று இயேசு கூறுகிறார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் பாரலோகம் சேர்க்கவும் தேவன் நமக்காக ஒரு இரட்சகரை அனுப்பினார்.

விட்டு விடுதல்

“உன்னுடைய தந்தை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்” என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் கூறினார். “மரணத்தை நெருங்குதல்” என்பது ஒருவருடைய வாழ்வின் கடைசி நிமிடங்களைக் குறிக்கும், ஆனால் அது எனக்குப் புதியதாக      இருந்தது, ஒரு ஒற்றையடி பாதையில் தனிமையாக பயணம் செய்வதைப் போல் தோன்றியது. என்னுடைய தந்தையின் கடைசி நாளில், என்னுடைய சகோதரியும் நானும் அவருடைய படுக்கையின் அருகில் அமர்ந்திருந்தோம், நாங்கள் பேசுவதை அவரால் கேட்க முடியுமா என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவருடைய வழுக்கைத் தலையை முத்தமிட்டோம். தேவன் அவருக்குத் தந்துள்ள வாக்குத் தத்தங்களை மெதுவாக கூறினோம். நாங்கள் ஒரு பாடலைப் பாடி, சங்கீதம் 23 ஐ வாசித்தோம். நாங்கள் அவரை நேசிக்கின்றோம், அவர் எங்கள் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறினோம். அவருடைய இருதயம் இயேசுவோடு இருக்க விரும்புவதை நாங்கள் அறிவோம், எனவே அவரிடம் இயேசுவிடம் போகலாம் என்று விடை கொடுத்தோம். இந்த வார்த்தைகளைச் சொல்வது தான், அவரை அனுப்பிவிடுவதில் சந்தித்த மிக வேதனை தரும் தருணம். சில நிமிடங்களில், நித்திய வீட்டில் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

நமக்கு அன்பானவர்களை வழியனுப்புதல் என்பது வேதனை தருவதாக உள்ளது. இயேசுவின் நண்பனான லாசரு மரித்தபோது, இயேசுவின் கண்கள் கண்ணீர் விட்டன (யோவா. 11:35). ஆனால், தேவன் நமக்கு வாக்களித்துள்ளபடி, இவ்வுலக மரணத்திற்கு பின்பும் நமக்கொரு நம்பிக்கையுள்ளது. “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று சங்கீதம் 116:15 சொல்கின்றது. அவர்கள் மரித்தாலும் மீண்டும் வாழ்வார்கள்.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா.11:25-26). நாம் எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தில் இருப்போம் என்ற செய்தி எத்தனை ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மிகவும் பிடித்தமானது

என்னுடைய கணவனின் சகோதரன் 2000 கிமீ தொலைவிற்கு அப்பால் வாழ்கின்றார், எனினும், அவருடைய நகைச்சுவையான பேச்சும், அன்பான உள்ளமும் அவரை, எங்களுடைய அன்பார்ந்த குடும்ப நபராக்கியது. தங்களுடைய தாயாருக்குப் பிடித்தமானவர் என்று அவருடைய உடன்பிறப்புக்கள் அவரைக்குறித்து நல்லெண்ணத்தோடு கேலி செய்வதுண்டு என்பது எனக்கு நினைவில் இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களெல்லாரும் சேர்ந்து, அவருக்கு “நான் அம்மாவிற்குப் பிடித்தமான பிள்ளை” என்று வாசகம் கொண்ட டி சர்ட்டைப் பரிசளித்தனர்.  நம்முடைய உடன்பிறந்தோர் செய்யும் இத்தகைய காரியங்களைக் குறித்து நாம்மெல்லாரும் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருவரை மட்டும் தனிச் சிறப்போடு கவனிப்பது என்பது கேலிக்குரிய காரியமல்ல.

 மற்றவர்களைக் காட்டிலும் யோசேப்பை, தான் அதிகமாக நேசிக்கின்றதைக் காண்பிக்கும் படி, யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்புக்கு பலவர்ணமான அங்கியைக் கொடுத்தான், என்பதாக ஆதியாகமம் 37 ஆம் அதிகாரத்தில் காண்கின்றோம் (வ.3). எந்த ஒரு விளக்கமும் தரப்படாமலே, அந்த அங்கி, “யோசேப்பு என்னுடைய நேசக் குமாரன்” என்பதை மறைவாக அல்ல, வெளிப்படையாகவேத் தெரிவிக்கின்றது.

ஒரு குடும்பத்தில், ஒருவரை மிக அதிகமாக நேசிப்பது என்பது அக்குடும்பத்தைப் பிரிக்கும். யாக்கோபின் தாயார் ரெபேக்காள்,  ஏசாவை விட யாக்கோபை அதிகமாக நேசித்தாள், அது அந்த சகோதரர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது (25:28). இது, யாக்கோபையும் தொற்றிக் கொண்டது. அவன் தன்னுடைய மனைவி ராகேலை (யோசேப்பின் தாயாரை), லேயாளைக் காட்டிலும் அதிகமாக நேசித்தான். அது பிரிவினையையும் தலைவலியையும் கொண்டுவந்தது (29:30-31). இந்த தவறான நடைமுறையால், யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்தனர், அவனை கொல்லவும் முயற்சித்தனர் (37:18).

நம்முடைய உறவுகளில், நாமும் இத்தகைய நடைமுறையைக் கைக் கொள்வோமாகில், அது சிக்கலை ஏற்படுத்தும். நாம் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எண்ணத்தைக் கடைபிடிப்போம், நம்முடைய பரமத் தந்தை நம் எல்லோரையும் நேசிப்பதைப் போன்று, நாமும் அனைனரையும் சமமாக நேசிப்போம் (யோவா.13:34).

ஆவியோடு இசைந்து

ஓர் அழகான, பெரிய பியானோவின் ஓசையைச் சரிசெய்பவர் வேலை செய்து கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதே பியானோவிலிருந்து வியத்தகு இசையைக் கேட்ட நாட்களை நான் நினைத்துப் பார்த்தேன். “How Great Thou Art” என்ற பாடலின் சிறப்பான இசையைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இப்பொழுது அந்த இசைக் கருவியின் ஓசையை சரிசெய்ய வேண்டியுள்ளது. சில ஸ்வரங்களின் சுருதி சரியாக உள்ளது, சிலவற்றின் சுருதி சற்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ உள்ளது, எனவே அதன் இசை கேட்பதற்கு இனிமையாக இல்லை. இப்பொழுது அந்தக் கருவியை சரியாக்குபவரின் வேலை, ஒவ்வொரு கீயும் ஒரே ஓசையை எழுப்பச் செய்வதில்லை, மாறாக ஒவ்வொரு கீயிலிருந்தும் வரும் ஓசை மற்றதோடு இணைந்து, ஓர் இனிமையான ஒருங்கிணைந்த இசையை எழுப்புவதேயாகும்.

ஆலயங்களிலும் கூட, இணையாத ஓசைகளை கேட்க முடியும். வித்தியாசமான நோக்கமும், திறமையும் உள்ள மக்கள், அனைவரும் சேர்ந்து பாடும் போது, ஒருங்கிணையாத ஓசைகளை எழுப்பலாம். கலாத்தியர்
5 ஆம் அதிகாரத்தில், பவுல் விசுவாசிகளிடம், “இணங்காமை, பொறாமை, கோபம், தன்னலமான நோக்கம்” ஆகியவற்றை விட்டு ஒதுங்குமாறு கேட்கின்றார். இவை தேவனோடுள்ள உறவை அழிப்பதோடு, மற்றவர்களோடுள்ள உறவையும் கெடுக்கின்றது. ஆவியின் கனிகளாகிய, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய இவைகளை நாம் அணைத்துக் கொள்ளும் படி பவுல் நம்மை ஊக்கப்படுத்துகின்றார்.

நம்முடைய வாழ்வு ஆவியினாலே நடத்தப்படும் போது, முக்கியமில்லாத காரியங்களுக்காக, தேவையில்லாமல் நாம் குழம்பிப் போவதைத் தவிர்ப்பது நமக்கு சுலபமாக இருக்கும். எதிர் காலத்தைக் குறித்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்வோம். நம்முடைய இருதயம் தேவனுடைய இருதயத்தோடு இசைந்து இருக்கும் போது, நாம் ஒரு மனதோடு அவருடைய கிருபையில் வளரவும் தேவன் நமக்கு உதவி செய்வார்.

மகிழ்ச்சிதரும் எண்ணங்கள்

What We Keep (வாட் வி கீப்) என்பதில் பில் ஷாப்பிரோ என்பவரின் நேர்முகத் தேர்வுகளைப் பற்றிய தொகுப்பு உள்ளது. இதில் வரும் ஒவ்வொரு நபரும், என்றும் மறக்க முடியாததும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ள முக்கியமான அநுபவங்களைக் கூறுகின்றனர்.

இது, என்னுடைய அநுபவத்திலும், நான் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதும் காரியங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவைகளில் ஒன்று, நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய, என்னுடைய தாயார் கைப்பட எழுதிய, சமையல் குறிப்பு அடங்கிய ஓர் அட்டை, மற்றொன்று, என்னுடைய பாட்டியம்மாவின் இளம்சிவப்பு நிற காப்பி கோப்பைகள். சிலர் தங்கள் நினைவில் சில காரியங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திய வார்த்தைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பு அல்லது வேதாகம வார்த்தைகள் வெளிப்படுத்தின சில உட்கருத்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்.

நாம் நம்முடைய இருதயத்திற்குள் எவற்றைத் தேக்கி வைத்துள்ளோம்?  நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியற்ற கணங்களையா: பதட்டம் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது, அது எந்த வேளையும் வெளிப்படலாம், கோபம் மேலாக இருக்கிறது, அது தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறது, மனக் கசப்புகள் அமைதியாக இருதயத்திற்குள் இருந்து, நமது சிந்தனைகளை அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி சபை மக்களுக்கு நேர்மையான “சிந்தனைகளைக்” குறித்து எழுதுகின்றார். அவர் அந்த மக்களிடம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாரிடமும் சாந்த குணத்தைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று கூறி உற்சாகப் படுத்துகின்றார் (பிலி. 4:4-9).

நாம் எவற்றைச் சிந்திக்க வேண்டும் என்று பவுல் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், நமக்குள்ளேயுள்ள இருளின் சிந்தைகளை அகற்றி, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் (வச. 7). நம்முடைய சிந்தைகளை உண்மை, உயர்ந்த எண்ணங்கள், நேர்மை, தூய்மை, அன்பு நிறைந்த, நேசிக்க கூடிய, போற்றக் கூடிய எண்ணங்களால் நிரப்புவோமேயானால், அவர் தரும் சமாதானம் நம்முடைய இருதயங்களை நிரப்பும் (வச. 8).

உன்னிடத்தில் உள்ளதைக் கொண்டு வா

“கல் சூப்”(Stone Soup) என்பது அநேக வெளியீடுகளில் வந்துள்ள ஒரு பழங்காலக் கதை. இக்கதையில், ஒரு கிராமத்திற்கு, ஒரு மனிதன் மிகுந்த பசியோடு வருகின்றான். ஆனால், அங்கு யாருமே அவனுக்கு ஒரு பிடி உணவளிக்க முன்வரவில்லை. அவன் நெருப்பை மூட்டி, அதில் ஒரு பானைத் தண்ணீரை வைத்து, அதில் ஒரு கல்லைப் போடுகின்றான். அவன், தன் “சூப்பை” கிண்ட ஆரம்பித்தவுடன், ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்த  அந்த கிராமத்தினரில் ஒருவர், இரண்டு உருளைக்கிழங்குகளை அதனோடு சேர்க்கும் படி கொண்டுவந்தார், மற்றொருவர் சில கேரட்டுகள், வேறொருவர் சில வெங்காயங்கள் இன்னும் ஒருவர் ஒரு கை பார்லி, ஒரு விவசாயி கொஞ்சம் பால் என அதனோடு சேர்த்தனர். கடைசியாக “கல் சூப்” மிகவும் ருசியான சூப்பானது.

இந்த கதை, பகிர்ந்து கொள்வதின் மதிப்பை விளக்குகின்றது. அத்தோடு, நம்மிடம் இருப்பது சாதாரணப் பொருளாக இருந்தாலும், அதையும் கொண்டுவரும்படி சொல்லுகின்றது. யோவான் 6:1-14 வரையுள்ள வார்த்தைகளில், ஒரு பெரிய கூட்ட மக்களிடையே, ஒரு சிறு பையன் மட்டும் தான், தனக்கு உணவு கொண்டு வ ந்திருக்கின்றான். அவனுடைய கொஞ்ச உணவான ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும், கிறிஸ்துவின் சீடர்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ஆனால், அதை இயேசுவிடம் அர்ப்பணித்த போது, அவர் அதைப் பெருகச் செய்து, ஆயிரக்கணக்கான ஜனங்களைப் போஷித்தார்!

ஒருமுறை, ஒருவர், “நீங்கள் ஐந்தாயிரம் மக்களுக்கு உணவளித்திருக்கத் தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்களுடைய உணவைக் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்றார். இயேசு ஒருவரின் உணவை எடுத்து, ஆசிர்வதித்து, நாம் நினைக்கவும், எதிர்பார்க்கவும் முடியாத அளவிற்குப் பெருகச் செய்தது போல (வ.11), நம்முடைய  சிறிய முயற்சியையும், திறமைகளையும், சேவையையும்  அவர் ஏற்றுக் கொள்வார். அவர் விரும்புவதெல்லாம், நம்மிடமுள்ளதை, மனப்பூர்வமாக அவரிடம் கொண்டு வர வேண்டும் என்பதையே.

ஆவலோடு காட்டப்படும் இரக்கம்

ஓர் இளம் தாய், தன்னுடைய மூன்று குழந்தைகளோடு விமானத்தில் பயணம் செய்தபோது, அவளுடைய மூன்று வயது பெண் குழந்தை போராடி, அழ ஆரம்பித்தது. அவளை அமைதிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய நான்கு மாத பையனும் பசியால் அழ ஆரம்பித்தான். 

உடனே, அவளருகிலிருந்த பயணி, அக் குழந்தையை வைத்துக்கொள்ள முன்வந்தார். எனவே அந்த தாயார், ஜெசிக்கா, தன்னுடைய மகளை இருக்கையில் அமர்த்தி, பெல்ட் போட உதவியாக இருந்தது. பின்னர் அந்த பயணி, தான் இளம்பெற்றோராக இருந்த போது செய்தவற்றை நினைவு படுத்திக் கொண்டு, அப்பெண் குழந்தையோடு சேர்ந்து படங்களில் கலர் அடிக்க ஆரம்பித்தார், அச்சமயத்தில், அந்த தாய் தன்னுடைய குழந்தைக்கு உணவு ஊட்டினாள். அதே பயணத்தில், அடுத்த விமானத்தில் பயணிக்கும் போதும், தேவைப்பட்டால் தான் உதவுவதாக முன் வந்தார்.

“நான் தேவனுடைய கரத்தினால் இந்த இடத்திற்கு அனுப்பப்பட்டேன். நான் யாரோ ஒருவரின் அருகில் இருக்குமாறு நேர்ந்திருக்கலாம். ஆனால் தேவன், நான் இதுவரை கண்டிராத அளவு மிகச் சிறந்த நபரின் அருகிலேயே  என்னை அமரச் செய்தார்” என்று ஜெசிக்கா கூறினாள்.

அறிமுகமில்லாதவரிடமும் ஆவலோடு காட்டப்படும் இரக்கத்தை 2 சாமுவேல் 9 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். சவுல் ராஜாவும், அவனுடைய மகன் யோனத்தானும் மரித்த பின்பு, அரசாட்சியைப் பிடிக்கக் கூடியவராக யாரேனும் இருந்தால், அவர்களை கொன்று போட்டு விடுவானென, சிலர் தாவீதைக் குறித்து எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவன், ”தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயை செய்யும் படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? (வச. 3) என்று கேட்கிறான். அப்பொழுது, யோனத்தானின் குமாரனான மேவிபோசேத்தை தாவீதிடம் கொண்டு வருகிறார்கள். தாவீது அவனுடைய தகப்பனாகிய சவுலின் நிலத்தையெல்லாம் அவனுக்குத் திரும்பக் கொடுக்கிறான், அவனைத் தன்னுடைய சொந்த குமாரனைப் போல பாவித்து, நித்தம் தன்னுடைய பந்தியில் அப்பம் புசிக்கும் படி செய்கின்றான்.(வ.11)

தேவனுடைய அளவற்ற இரக்கத்தைப் பெற்ற நாம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களிடம் ஆவலோடு இரக்கத்தைக் காட்டுவோம். (கலா. 6:10)

சுலபமாக சிக்குண்டு போதல்

அடர்ந்த, வெப்பமான காட்டினுள் போர் செய்துகொண்டிருந்த போர் வீரர்கள், தங்களை வெறுப்படையச் செய்யும் ஒரு பிரச்சனையை சந்தித்தனர். குத்தக்கூடிய முட்களைக் கொண்ட ஒரு வகை படர்கொடி, திடீரென, எதிர் பாராத விதமாக போர் வீரர்களின் உடலைச் சுற்றிக் கொண்டு, அவர்களை நகர விடாமல் செய்துவிடும். அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள போராடும் போது, மேலும் மேலும் கொடிகள் சுற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் இந்த கொடிக்கு “ஒரு நிமிடம் காத்திரு” என்று பெயரிட்டனர், ஏனெனில், இந்த கொடிகளால் சுற்றப்பட்டு, நகரமுடியாமல் தவிக்கும் போர் வீரர்கள் மற்ற வீரர்களை, “எனக்காக ஒரு நிமிடம் காத்திருக்கவும், நான் கட்டப்பட்டுள்ளேன்” என்று கூப்பிடுவார்கள்.

இதே போன்று, பாவ வலையில் வீழ்ந்த, இயேசுவின் விசுவாசிகளாலும் முன்னேறிச் செல்ல முடியாமல் போய் விடும். எபிரெயர் 12:1, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு,… பொறுமையோடே ஓடக்கடவோம்.”என்று நம்மை எச்சரிக்கின்றது. ஆனால், நம்மைத் தடுக்கிற பாவத்தை எப்படி தூக்கி எறிவது?

நம் வாழ்வை ஆண்டு கொண்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழி இயேசுவே. நம்மை இரட்சிக்க வல்லவராகிய அவரையே நம் கண்கள் நோக்கக் கடவது (12:3). அவர் தேவக்குமாரனாயிருந்தும், முழுவதும் மனிதனாக வந்தபடியாலே, “அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியர் அவர். (2:17-18; 4:15) பாவத்தினாலே கட்டுண்டவர்களாய் நாம் காணப்படலாம், நாம் சோதனைகளை மேற்கொள்ளும் படி தேவன் விரும்புகிறார். நம்முடைய சுய பெலத்தினால் அல்ல, அவருடைய பெலத்தோடே ,நம்மைச் சுற்றி வளைக்கின்ற எந்த பாவத்தையும் உதறித் தள்ளி விட்டு, அவருடைய நீதியின் வழியில் பொறுமையோடு ஓடக்கடவோம். (1 கொரி. 10:13).

சாப்பிடு, மீண்டும் சாப்பிடு

கெரி, பால் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்ட போது, இருவருக்குமே சமைக்கத் தெரியாது. ஒரு நாள் மாலை கெரி, மெக்ரொனி வகை உ.ணவை அதிகமாக தயாரித்தாள். எனவே அந்த தம்பதியர் மறுநாளும் அதே உணவையே எடுத்துக் கொண்டனர். மூன்றாம் நாள் பால் அதிக அளவு பாஸ்தாவை தயாரித்தார். எனவே அவர்கள் அந்த வாரம் இறுதி வரை அதே உணவையே எடுத்துக்கொள்ளலாமெனத் திட்டமிட்டனர். அன்று இரவு அவர்கள் சாப்பிட உட்கார்ந்த போது கெரி, “இவ்வகை உணவு எனக்கு சலித்துவிட்டது’’ என்றாள்.

இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் ஒரே வகை உணவைச் சாப்பிட்டார்களென்றால், அது எப்படி இருந்திருக்கும். ஒவ்வொரு நாள் காலையும், தேவன் அவர்களுக்களித்த இனிமையான உணவைச் சேகரித்தனர். (மறுநாள் ஓய்வு நாளாயிருந்தாலன்றி, மீதமொன்றும் வைக்க கூடாது (யாத். 16:23-26). அவர்களுடைய திறமையினால் அதைச் சுட்டனர், வேக வைத்தனர் (வச. 23), ஆனாலும், எகிப்தில் தாங்கள் அநுபவித்த கொடுமைக்கும், அடிமைத்தனத்திற்கும் பலனாகக் கிடைத்த அந்த அற்ப உணவிற்காக அவர்கள் ஏங்கினர்! (வச. 3, எண். 11:1-9).

நாமும் கூட, சில வேளைகளில் நம் வாழ்வு முன்பிருந்தது போல இல்லையே என ஏங்கினதுண்டு, அல்லது ஒரு வேளை ஒரே வகையான வாழ்க்கை முறை நம்மை சலிக்கச் செய்யலாம். இஸ்ரவேலர்கள் தேவன் மீது நம்பிக்கை வைக்கவும், ஒவ்வொரு நாளும், அவரையே சார்ந்திருக்கும் படியும், தேவன் அவர்களின் தேவைகளனைத்தையும் உண்மையாய் கொடுத்து வந்தார் என்பதை யாத்திராகமம் 16ஆம் அதிகாரம் விளக்குகின்றது.

நம்முடைய தேவைகளனைத்தையும் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவர் நம்முடைய ஏக்கங்களை நிறைவேற்றுவார், -நம்முடைய ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்
(சங். 107:8).